புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெருவிழா! 9 நாட்கள் கொண்டாடிய அமெரிக்கத் தமிழர்கள்!!

 
Bharathidasan


புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு  "புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா" என்ற பெயரில் 9-நாள் தொடர்விழா அமெரிக்காவில் நடைபெற்றது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் ஊடகம் இணைந்து உலகத் தமிழர்களுடன் கொண்டாடினார்கள். கருத்தரங்கம், தமிழிசையரங்கம், சிறார்களுக்கான கட்டுரைப்போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவியரங்கம், இலக்கிய அரங்கம்,பட்டிமன்றம், நினைவு நாள், பிறந்தநாள் சிறப்புரைகள் என  பலநாடுகளிலிருந்து பங்கேற்றுச் சிறப்பித்தனர்

ஏப்ரல் 21, முதல் நாள் நிகழ்வின் போது, பேரனின் பார்வையில் பாரதிதாசன் என்ற தலைப்பில் பாரதிதாசனின் பேரன் கோ. பாரதி  தன் தாத்தாவை பற்றிய  நினைவலைகளைப் பகிர்ந்தார். பாட்டாளி மக்களுடன், கவிஞர் உரையாடிப் பெற்ற பட்டறிவை கவியாக வடித்த காட்சியை கண் முன்னே நிறுத்தினார். ஒரு குடும்பத்தலைவராக இருந்த பாங்கையும் விவரித்தவர்  பார்வையாளர்களின்  கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

ஏப்ரல் 22, இரண்டாம் நாள் நிகழ்வு, "புரட்சிக்கவிஞர் ஒரு பார்வை" என்ற தலைப்பில் கருத்தரங்கமாக அமைந்தது.  பட்டிமன்றப் புகழ் பைந்தமிழ்ச்செல்வி புதுகை பாரதி தலைமையேற்று நடத்தினார்.  ’புரட்சிக்கவிஞரும் விளிம்புநிலை மக்களும்’ என்ற தலைப்பில் கவிஞர்  இப்ராகிம், ‘பாரதியின் சொத்து பாரதிதாசன்’ என்ற தலைப்பில் செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன் , ‘ பாரதிதாசன் திருக்குறள் உரையின் சிறப்பு’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜெயா மாறன் மற்றும்  ‘பாவேந்தரின் திரையிசைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பேச்சாளர் விஜய் சண்முகம் ஆகியோர் பேசி சிறப்பித்தனர்.

ஏப்ரல் 23, மூன்றாம் நாள் நிகழ்வு தமிழிசையரங்கம் ஆகும். மம்மது ஐயா ஒருங்கிணைக்க,  பாபு விநாயகம், கரிசல் கருணாநிதி, மினு பாஸ்கரன் மற்றம் ஒரத்தநாடு கோபு ஆகியோர் பாரதிதாசன் பாடல்களைப் பாடிச் சிறப்பித்தனர்.  புரட்சிக்கவிஞர் பாடல்கள் திரையிசையில் பரவலாக இருந்தாலும் தமிழிசைக்கு ஏற்ற வகையில் அவரது நிறைய பாடல்களுக்கு இடமுண்டு.  பள்ளி, கல்லூரிகளில் மற்றும் பல இலக்கிய கலை நிகழ்ச்சிகளில் பாரதிதாசன் பாடல்களை உலகத்தமிழர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள். 

ஏப்ரல் 24, நான்காம் நாள் நிகழ்வில், “பாவேந்தரின் பார்வையில் இயற்கை” என்ற தலைப்பில்  8 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.  அமெரிக்கா, அபு தாபி, இந்தியா மற்றும் ஈழத்திலிருந்து குழந்தைகள் பங்கு பெற்றுப் பேசினார்கள்.  நடுவர்களான முனைவர். பிரபாகரன், முனைவர்  வாசு அரங்கநாதன் மற்றும் முனைவர் மேகலா இராமமூர்த்தி ஆகிய மூவரையும் திக்குமுக்காடவைத்தது. இயற்கையின் பல பாடுபொருள்களையும் கவிஞரின் காப்பியங்களில் அழகின் சிரிப்பு, சஞ்சீவீ பர்வதத்தின் சாரல் போன்றவைகளிலிருந்து பேசினார்கள். கடுமையான போட்டியைக் கண்டு நடுவர்களில் ஒருவரான முனைவர் வாசு அரங்கநாதன், அனைவருக்கும் ஊக்கப் பரிசு அளிப்பதாக உறுதியளித்தார்.  அமெரிக்கத் தமிழ் ஊடகத்தைச் சார்ந்த திருமிகு. இரூபண் அவர்களும் ஊக்கப் பரிசு அளிக்க உறுதியளித்தார்.  போட்டியில் முதலாம் இடத்தில் ஜெ ஆரணி, இரண்டாம் இடத்தில் அமிழ்தினி மற்றும் மூன்றாம் இடத்தில்  தீ. கு. சங்கமித்திரா வெற்றி பெற்றார்கள். 

ஏப்ரல் 25 ஐந்தாம் நாள் நிகழ்வு, "பாரதிதாசன் படைப்புகள்" என்ற தலைப்பில் பாரதிதாசனின் ஐந்து நூல்களை அறிமுகப்படுத்தும் வகையில்  கருத்தரங்கம் நடைபெற்றது. ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஈழத்திலிருந்து பங்கு கொண்டு பேசி சிறப்பித்தார்கள். தலைமையேற்ற முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் பாரதிதாசன் படைப்புகள் பற்றிய நல்லதொரு அறிமுகம் தந்தார். புரட்சிக்கவி நூல் குறித்து பேராசிரியர் தமிழ்ச்சுடர் வ. விசயரங்கன், சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நூல் குறித்து  முனைவர்  கா. பிரிதா, பாண்டியன் பரிசு நூல் குறித்து  முனைவர்  சித்ரா மகேஷ், இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் குறித்து சாரங்கன் விக்கினேசுவரநாதன், கண்ணகி புரட்சிக் காப்பியம் நூல் குறித்து   டிலோஜினி மோசேஸ் பேசினார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி பேசிய ஒருங்கிணைப்பாளர்கள், பாரதிதாசன் காப்பியம் என்பது பெருங்கடல் அதிலிருந்து ஒரு துளியை மக்கள் பார்வையில் எடுத்துவைக்கும் முயற்சி என்றனர்.

ஏப்ரல் 26 ஆறாம் நாள் நிகழ்வில், "பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. நடுவராக வீற்றிருந்த இலக்கியச்சிம்மம் எழுச்சிக்கவிஞர் கங்கை மணிவண்ணனின் தமிழாற்றாலைக் கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.  காதல் என்ற தலைப்பில் அமெரிக்காவிலிருந்து அனிதா இராஜேஷ் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து செந்தமிழ்க்குரிசில் புலவர் கோ. கோபாலகிருஷ்ணன் பாவேந்தரின் காதல் பாடல்களின் சிறப்பை எடுத்துக்கூறினார்கள். மலேசியாவிலிருந்து ஊடகவியலாளர்  பொன் கோகிலம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து முப்பா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் கோட்டாறு தமிழரசன் (எ) ச.ச.வேலரசு புரட்சிக்கவிஞரின் வீரம் பற்றி பாடிய பாடல்களின் சிறப்பைப் பேசினார்கள். இரு அணியின் பொழிவைக் கேட்ட நடுவர் இறுதியில் பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது வீரமே என்ற தீர்ப்பளித்தார்.



ஏப்ரல் 27 ஏழாம் நாள் நிகழ்வில், "குடும்பவிளக்கு - முதியோர் காதல்" என்ற  தலைப்பில் இலக்கியப் பேச்சாளர் முன்னாள் அண்ணா பேரவைத் தலைவர் துரை. எழில்விழியன் உரையாற்றினார். காதல் உணர்வு இளைஞர்களுக்கு மட்டுமா? அன்று, காதல் அனைத்து வயதினருக்கும், முதியோரக்கும் உண்டு என்பதை குடும்பவிளக்கு காப்பியத்தில் பாரதிதாசன் எடுத்து கூறியதை தன் வாழ்க்கைப் பக்கங்களிலிருந்து எடுத்துரைத்தார். " எது எனக்கின்பம் நல்கும்? இருக்கின்றாள்’ என்ப தொன்றே! என்ற பாடல் வரிகள் மொத்த பங்கேற்பாளர்களையம் அமைதியில் ஆழ்த்தியது. சொற்பொழிவுக்குப் பிறகு இக்காப்பியத்தை பற்றி எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் திதுரை. எழில்விழியன் பதிலளித்தார். தமிழ் ஆர்வலர் கல்யாணசுப்பு ஒருங்கிணைத்தார்.

ஏப்ரல் 28 எட்டாம் நாள் நிகழ்வு, மகாகவி ஈரோடு தமிழன்பன் தலைமையில் "அழகின் சிரிப்பு" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ் என்ற தலைப்பில் செந்தமிழ்குரிசில் புலவர். இ. சீனிவாசன், கடல் என்ற தலைப்பில் இராஜி வாஞ்சி, வானம் என்ற தலைப்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன், குன்றம் என்ற தலைப்பில் கவிஞர் ம.வீ. கனிமொழி மற்றும் தென்றல் என்ற தலைப்பில் கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ் பங்குபெற்று பாவேந்தருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர். கவிஞர்களின் கருத்துத்திறனையும், உவமைத்திறனையும், எழுத்துத்திறனையும் ஈரோடு தமிழன்பன் சிலாகித்துப் பேசினார். தங்கள் தலைமுறைக்குப் பின்னர் பாரதிதாசனின் கொடியேந்தி நிற்கும் பல  இளைஞர்களைக் கண்டு மனமகிழ்ந்தார். ஒன்பது நாட்கள் இத்தகைய விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தை வாழ்த்திப் பேசினார்.  

ஏப்ரல் 29 ஒன்பதாம் நாள், புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. கவிஞர் அறிவுமதி அவர்கள் பாரதிதாசனுடன் ஒரு நேர்க்காணல் போன்று ஒரு கற்பனை நிகழ்ச்சியை "பாரதிதாசன் - மெய்யெழுத்து" என்ற தலைப்பில் நடத்தினார். பாரதிதாசன் உள்ளக்கிடங்கிலிருந்து பேசியது போல் இருந்தது என்று பார்வையாளர்கள் கூறினர்.  தற்போது பாரதிதாசன் இருந்திருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன கூறுவார் என்று கேட்டதற்கு "உயிர்ப்பற்ற வட மொழியை உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி மீண்டும் உயிர்ப்புடன் வைக்கும் செயல் ஒழித்து நல்ல தமிழ்ப்பெயர்களை சூட்டுங்கள்" என்றுரைப்பார் என்றார் கவிஞர் அறிவுமதி.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "புரட்சிக்கவிஞரின் மொழி வளர்ச்சிச் சிந்தனைகளின் இன்றைய தேவை" என்ற தலைப்பில்  16 வயதுக்கு  மேற்ப்பட்டவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.  முடிவுகளை நடுவுர்களில் ஒருவரான முனைவர் மேகலா இராமமூர்த்தி அறிவித்தார். இன்றைய நிலையில் தமிழ் மொழி வளர்ச்சியின் மேம்பாட்டை கவிஞரின் சிந்தையில்  உதித்த இலக்கியங்களிலிருந்தும் காப்பியங்களிலிருந்தும் அருமையாக எடுத்துரைத்திருந்தனர் போட்டியாளர்கள் என்று கூறினார்.  நடுவர்கள் எழுத்துத்திறன், கருத்துத்திறன் மற்றம் இன்ன பிற காரணிகளின் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்திருந்தனர். முதல் பரிசினை  செந்தமிழ்ச் செல்வி, இரண்டாம் பரிசினை  ஹேமலதா மற்றும் மூன்றாம் பரிசினை முனைவர் உரு. அசோகன் பெற்றனர். 

ஒன்பது நாள் பாரதிதாசனுக்கு விழா எடுத்து சிறப்பித்ததை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் புதல்வி  சித்தரச்செந்தாழை பாராட்டிப் பேசினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் திருமிகு சோம இளங்கோவன் அவர்கள் இளந்தலைமுறையின் இச்செயல் பாராட்டுக்குரியது என்று கூறினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  துரைக்கண்ணன்,  பிரசாத் பாண்டியன் மற்றும் குமணன் நிகழ்ச்சி மக்களிடமும், இளந்தலைமுறையினருடமும் சென்றடைந்து தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்கள்.

இறுதியாக இந்த ஒன்பது நாள் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் நிறுவனர் ஆறுமுகம் பேச்சிமுத்து நன்றி தெரிவித்து உரையாற்றி, புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2021 நிகழ்வை நிறைவு செய்தார்.

- பிரசாத் பாண்டியன்

From around the web