இந்திய விமானங்கள் ஆஸ்திரேலிய வர மே 15-ம் தேதி வரை தடை!!
கொரோனா பரவல் காரணமாக, இந்திய பயணிகள் விமானங்களுக்கு மே 15-ம் தேதி வரை ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து வரும் நேரடி பயணிகள் விமானங்களுக்கு வரும் மே 15-ம் தேதி வரை தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அரசின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.