வியட்நாமில் பரவும் கொரோனா கலவையான திரிபு வைரஸா..? உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்த ஒரு புதிய கொரோனா திரிபு வியட்நாமில் பரவியதாக கூறப்பட்டது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், பல்வேறு பிறழ்வுகள் அடைந்து புதிய வகை கொரோனாவாக வீரியம் பெற்று தாக்கத்தொடங்கியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வியட்நாமில் புதிய வகை கலவையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அண்மையில் தெரிவித்து இருந்தது. காற்றில் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது எனவும் வியட்நாம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், வியட்நாமில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா கலவையானது அல்ல என்று உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வியட்நாம் நாட்டிற்கான பிரதிநிதி கிடோங் பார்க் இது பற்றி கூறும் போது, “உலக சுகாதார அமைப்பு வரையறைகளின் படி வியட்நாமில் தற்போதைக்கு புதிய வகை பிறழ்வு வைரஸ் எதுவும் இல்லை. டெல்டா வகை கொரோனா வைரசே வியட்நாமில் பரவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்