அமெரிக்க இந்தியன் சூப்பர் மார்க்கெட் கடைகளில் கொரோனா வைரஸ்?
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவின் சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் முதலில் “Shelter In Place” உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே இந்தியக் குடும்பங்களில் மளிகை வாங்குவதற்கான பரபரப்பு தொற்றிக் கொண்டது.
நாடெங்கும் உள்ள இந்தியன் சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொருட்கள் வாங்கினார்கள். அரிசி, பருப்பு உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன.
அடுத்தடுத்த நகரங்கள், மாநிலங்களில் Shelter In Place உத்தரவு வர ஆரம்பித்ததும், எல்லா ஊர்களிலும் இந்தியன் கடைகளில் கூட்டம் அலை மோதியது. அந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டின் நியூயார்க் / நியூஜெர்ஸி பகுதியில் உள்ள கிட்டங்கியில் வேலை பார்க்கும் ஊழியருக்கு கொரோனோ தொற்று இருந்ததாகவும் அதனால் நாடு முழுவதும் அந்த கடைகளில் கொரோனா பரவி விட்டதாகவும் சமூகத் தளங்களில் தகவல் வெளியானது. அந்த குறிப்பிட்ட நிறுவனம் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார்கள்.
தற்போது அதே நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தங்கள் 54 கடைகளையும் அடுத்த 10 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது பலருக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் கொரோனா மையமாக நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்டிகெட் மாநிலங்கள் உருவாகிவிட்டது.
நியூயார்க் 52 ஆயிரத்து 318, நியூஜெர்ஸி 11 ஆயிரத்து 124, கனெக்டிகட் ஆயிரத்து 524 என இந்த மாநிலங்களில் மட்டுமே, மொத்த பாதிப்பு 65 ஆயிரமாகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 901 ஆகவும் உள்ளது. நியூயார்க் நகரத்தில் மட்டுமே 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட கிழக்கு அமெரிக்க மாநிலங்களில் உள்ள இந்தியன் சூப்பர் மார்க்கெட் கடைகளுக்கு ஏராளமான பொருட்கள் நியூயார்க் பகுதியில் உள்ள கிட்டங்கிகளிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கலாமோ, அதன் மூலம் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் மீதும் கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க இந்தியரான ராஜிவ் மல்ஹோத்ரா அமெரிக்காவில் இயங்கும் இந்தியன் சூப்பர் மார்க்கெட்கள் பற்றி ட்விட்டரில் பரபரப்பான தகவல் வெளியிட்டுள்ளார்.
“நியூ ஜெர்ஸியில் 25 பெரிய இந்தியன் சூப்பர் மார்கெட்கள் உள்ளன. எல்லோருமே கடைகளை மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர். நியூயார்க் பகுதியில் உள்ள மத்திய கிட்டங்கியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு சூப்பர்மார்கெட் உரிமையாளர் என்னிடம் தெரிவித்தார். இந்திய சூப்பர் மார்கெட் கடைகளில் உள்ள நிறைய ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. புதிய ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது,” என்று ராஜிவ் மல்ஹோத்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
New Jersey has over 25 large Indian supermarkets. Almost all decided to close down until further notice. One owner told me the central supply warehouse in NY became infected. Many workers at Indian stores sick. Tough to get new workers.
— Rajiv Malhotra (@RajivMessage) March 28, 2020
அமெரிக்காவில் நீண்டகாலமாக வசித்து வரும் கணிணித்துறை வல்லுனர், தொழில் முனைவோர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ராஜிவ் மல்ஹோத்ரா Infinity Foundation என்ற அமைப்பை நிறுவி இந்தியக் கலாச்சாரம், இந்துயிசம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியவர் என்பதுவும் குறிப்பிடத் தக்கது.
இப்போது அமெரிக்காவில் உள்ள கொரோனா வின் கடுமையான தாக்குதல் ஏற்பட்டுள்ள சூழலில், அங்குள்ளா இந்தியன் சூப்பர் மார்க்கெட் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.