ஒரு எட்டாவது அதிசயம்
உருவாக்குவது
சுலபமான வேலையில்லை
அதற்கு நெடுங்காலம்
திட்டமிடல் வேண்டும்
உயிரினங்கள் வாழ தகுதியற்ற
இடமாக ஆக்குவது என்பது
அவ்வளவு எளிதான
காரியமில்லைதான்
முதலில் நீர்வரத்தை
துண்டிக்க நதிகளை
காயவிடவேண்டும்
ஈரமென்பது அந்தப்பகுதியை
எந்தவகையிலும்
தீண்டாமல் இருக்க
நீண்டகால திட்டங்கள்
வேண்டும்
நிலங்களை மலடாக்க
நிறைய
உரமும் பூச்சிக்கொல்லியும்
போடவேண்டும்
ஆங்காங்கு பாசனத்திற்கு
ஆழ்துளை
கிணறு வெட்ட
நிறைய வங்கிக்கடன்
அளிக்க வேண்டும்
தண்ணீரின் தேவை
அதிகமாகும்போது
போட்டி போட்டு
நிலங்களை துளையிட
வேண்டும்
ஒருபோதும் மரங்கள்
வளர்ந்து விடக்கூடாது
என்பதில்
தெளிவாக இருக்க
வேண்டும்
அது மழையை தருவிக்கும்
ஆதரவாளன்
என்பதில் எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும்
இருக்கிற மரங்களை
தேசிய அனுமதி பெற்ற
லாரிகள் செல்லும்
சாலைகளுக்காக
முற்றிலுமாக
வெட்டி விட வேண்டும்
இப்போது ஆளில்லா
விமானம் கொண்டு
எங்கேயாவது பச்சை
புலப்படுதிறதா என்பதை
கண்காணிக்க வேண்டும்
ஒன்றும் இருப்பதற்கு
சாத்தியமில்லை
மேற்கூறியவற்றை
மீறி
எதுவும் தென்படவில்லை
என்பதை உணர்ந்தவுடன்
முன்கூட்டி முடிவுசெய்தபடி
நமது வேலையை
துரிதமாக
ஆரம்பிக்க வேண்டும்
பாலைவனத்தில்
எப்படியிருந்தாலும்
ஒன்றிரண்டு உயிரினங்கள்
வாழும்
அவையும் பஞ்சத்திற்குப்பின்
நாடு கடந்து போகும்
என்பதையும் கருத்தில்கொண்டு
ராட்சத எந்திரங்கள்
மூலம்
பக்கவாட்டிலும் செங்குத்தாகவும்
ஆழ்துளையிட்டு பூமியை
பிளக்கவேண்டும்
ஊரை வாழ்வாதாரமாய்
கொண்டு
வசித்து வருபவன்
இவையெல்லாம் தேவைதானா
எனக்கேட்டால்
வாயில் துப்பாக்கியால்
சுட வேண்டும்
பின் பிளவிலிருந்து
பெறப்படும்
வளத்தை வாரி அள்ளி
பிரித்துக்கொள்ளவேண்டும்
அது வாயுவோ
எண்ணையாகவோ
எந்த
கருமாந்திரமோ இருக்கலாம்
அதன்பின்
கொஞ்ச நாளில்
சிறிது தூரம்
வேர்பரப்பி நின்ற
ஒன்றிரண்டு மரங்களும்
சோர்ந்து விடும்
புல்லை எண்ணை
படிவம்
புதைத்து விடும்
இப்போது நாம்
எதிர்பார்த்தபடி
எல்லாம் தயார்
முடிந்தால் ஈச்சை மரம்
நடவோ
ஒட்டகம் வாங்கி
விடவோ
முயலவேண்டும்
இப்போது முழுமையான
பாலைவனம் ரெடி
என்கிற நிலையில்
காவிரி டெல்டாவை
உலகின்
மிகப்பெரிய பாலையாக்கி
எட்டாவது அதிசயமாய்
அறிவிக்க வேண்டும்
– புவிநீலன்