கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்! கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் எதனால் வந்தது?
கிருஷ்ணரின் அழகுக்கு அழகு சேர்ப்பது எப்போதும் தலையில் சூடியிருக்கும் மயில் இறகு. கிருஷ்ணன் ஒரு அலங்காரப் பிரியன். அதற்கேற்ப தாய் யசோதா எப்போதும் அவனை பட்டு பீதாம்பரங்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து விடுவாள். இருந்தாலும் கிருஷ்ணனின் தலையில் இடம் பிடிக்கும் பாக்கியம் மயிலிறகிற்கே கிடைத்தது.
மயில் இறகு எப்படி கிருஷ்ணனின் தலையில் இடம் பிடித்தது?இதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு. பட்டு பீதாம்பரத்துடன் இந்த உலகையே ஆள வேண்டிய கிருஷ்ணன், ஆயர்பாடி சிறுவர்களுடன் குழந்தையாக மண்ணில் புரண்டு விளையாடுவது பிடித்தமான ஒன்று. மண்ணில் புரண்டாலும் அவன் முகத்தில் ஒளி வீசிய தெய்வீக அழகால் கோகுலவாசிகளின் செல்லப் பிள்ளையாகத் திகழ்ந்தான்.
கண்ணனின் மேல் காதலும் பற்றும் கொண்ட ஆயர்பாடி சிறுவர்கள், விளையாட்டில் தங்கள் மனதுக்கு நெருக்கமான கண்ணனை கௌரவிப்பதற்காக அங்கே சுற்றித்திரிந்த மயிலை பிடித்து,அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் வைத்து கொண்டாடினார்கள். எப்போதும் தலையில் வைத்துக் கொள்ள நண்பர்கள் வேண்டினர்.
தோழர்களின் ப்ரியத்திற்காக அன்று முதல் கிருஷ்ணனின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடத்தை பிடித்தது.மயில் இறகு கிருஷ்ணனின் அடையாளமாகவே மாறிவிட்டது. நம் எல்லோர் மனத்திலும் மயிலிறகால் இடம் பிடித்துவிட்டான் கோகுல கிருஷ்ணன்.