வாட்ஸ் அப்பில்வரும் வீடியோ மூலம் பயனர்களின் தகவல் லீக்! பகீர் தகவல்!
பெகஸஸ் மால்வேரை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் ஹேக் செய்யபட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்த விவாதம் மறைவதற்குள் மற்றொரு மால்வேர் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிஇஆர்டி எனப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் ரெஸ்பான்ஸ் டீம் இந்த பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ளது, இதன் படி புதிய மால்வேரானது mp4 file வடிவத்தில் பயனர்களின் போனுக்கு அனுப்பப்படும். இந்த வீடியோ மெசெஜை ஓபன் செய்ததும் போனானது ஹேக்கரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இதன் மூலம் அந்த நபரின் வாட்ஸ் அப் அக்கவுண்ட், உரையாடல்கள், புகைப்படம் மற்றும் போனில் உள்ள தகவல்களை திருட முடியும்.
இந்த மால்வேர் அதி தீவிர அச்சுறுத்தல் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு தளத்தை சேர்ந்த பயனாளர்களையும் இது தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், வீடியோ டவுன்லோட் ஆப்ஷனில் ஆட்டோமெட்டிக் டவுன்லோடை on செய்து வைத்திருப்பர்.
இவர்களின் வாட்ஸ் அப்பிற்கு அந்த மால்வேர் கொண்ட வீடியோ வரும் பட்சத்தில் ஆட்டோமெட்டிக்காக டவுன்லோடு ஆகி தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளது. எனவே ஆட்டோமெட்டிக் வீடியோ டவுன்லோடு ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்க வேண்டும், தெரியாத எண்ணில் இருந்தோ அல்லது சந்தேகத்துக்குரிய வகையிலோ வரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ் அப்பின் சமீபத்திய வெர்ஷனை டவுன்லோட் செய்து கொள்ளும்படி அந்த நிறுவனம் பயனாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.