500 வருட சபதம் முடிவுக்கு வந்தது! மகிழ்ச்சியில் அயோத்தி மக்கள்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று பூமி பூஜை செய்யப்பட்டது. சூரியவம்ச க்ஷத்ரிய இனத்தவர்கள் அயோத்தியை சுற்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் முன்னோர்கள் முகலாயர்களால் அயோத்தியில் இராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் மீது பாபர் மசூதி கட்டப்பட்டபோது மறுபடியும் ராமர் கோவில் கட்டும் வரை தலைப்பாகையும்,காலணியும் அணியப் போவதில்லை என்று சபதம் எடுத்தனர். அதையடுத்து தற்போது வரை அவர்கள் தலைப்பாகையும், காலணியும் அணியாமல் வாழ்ந்து வந்தனர்.
தற்போது அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்ததுடன் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தொடங்கிவிட்டன.
பகவான் ராமரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சூரியவம்ச க்ஷத்ரிய மரபைச் சேர்ந்தவர்கள் தங்களின் சபதம் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளனர். தற்போது ராமர் கோவிலைக் கட்டத் தொடங்கி விட்டதால் அந்த சந்ததியினர் இல்லம் தோறும் தலைப்பாகைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முன்னோர் பூண்ட உறுதியை காக்கும் வண்ணம் திருமணங்களில் கூட இவர்கள் தலைப்பாகை அணிந்ததில்லை எனக் கூறுகின்றனர்.
இவர்களது முன்னோர்கள் கூட காலணி அணிவதில்லை என்று உறுதி எடுத்ததால் மரப் பாதுகைகளை அணிந்தார்களாம். முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி 16ஆம் நூற்றாண்டில் முகலாயர்களிடமிருந்து ராமர் கோவிலை பாதுகாக்க தாகுர் கஜ் சிங் தலைமையில் போர் புரிந்த அவரது முன்னோர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தோற்று விட்டதாகவும் அந்த நேரத்தில் தான் மீண்டும் ராமர் கோவில் கட்டும் வரை தலைப்பாகையும் காலணியும் அணிவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார்.