விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!!

 
Tamizhmani

ஆர்.கே.பேட்டை அருகே விவாகரத்து கேட்டு தராத ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 40). இவரது மனைவி மங்களா (வயது 37). இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒரு மகன் தந்தையிடமும், மற்றொரு மகன் தாயிடமும் வளர்ந்து வருகின்றனர்.

கணவரை விட்டு் பிரிந்த மங்களா ஆர்.கே. பேட்டை ஒன்றியம் அய்யனேரி கிராமத்தில் தையல் கடை வைத்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அய்யனேரி கிராமத்திற்கு சென்ற தமிழ்மணி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மனைவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு மங்களா சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி மங்களாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

தகவல் கிடைத்ததும் அக்கம்பக்கத்தினர் மங்களாவை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மங்களா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தமிழ் மணியை சோளிங்கர் அருகே கரிக்கல் என்ற கிராமத்தில் கைது செய்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web