இவர்களுக்கு எல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - கூட்டுறவுத்துறை அறிக்கை

 
Gold-Loan

35.37 லட்சம் நகைக்கடன்கள் தள்ளுபடி கிடையாது என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பொது நகைக்கடன் மற்றும் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்வது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டு, அந்த பட்டியல்கள் அனைத்தும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தன.

இதன்படி நகைக்கடன் பெற தகுதி இல்லாதவர்கள் என்று  

  • ஏற்கனவே, 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின் படி இடம் பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர்
  • நகைக்கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள்
  • 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர்
  • 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர்
  • கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
  • கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
  • அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
  • குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
  • ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
  • எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர்
  • ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைத்தாரர்கள்.

மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் 35,37,693 பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web