பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
MAS

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2-ந் தேதி காலடி எடுத்து வைத்த ஒமைக்ரான் வைரஸ், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவின் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 42 பேரின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுக்களை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிக்கு டாக்டர் வினிதா தலைமையிலான டாக்டர்கள் பர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தனர். இந்த குழுவினர் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னரே எத்தனை பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரங்கு தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதியன்று முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு தெரிய வரும். கடந்த சில தினங்களாக சென்னையில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் இடையே முககவசம் அணியும் பழக்கம் குறைந்து விட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படும். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web