‘நாகை மீனவன்’ யூ-டியூப் கும்பலுக்கு சர்வதேச கடத்தல் குழுவுடன் தொடர்பா..?
இலங்கைக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற ‘நாகை மீனவன்’ யூடியூபர்ஸ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
கடந்த 27-ம் தேதி, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்று தலைமறைவாக உள்ள பிரபல யூ-டியூபர்ஸ்களை சுங்கத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வந்தனர். மேலும், சர்வதேச போதை பொருள் கடத்தல் குழுவோடு இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ‘நாகை மீனவன்’ யூ-டியூப் சேனலை நடத்தி வந்த கீச்சாங்குப்பம் மற்றும் சேவா பாரதி பகுதிகளைச் சேர்ந்த குணசீலன், சதீஷ், சிவசந்திரன் மற்றொரு குணசீலன் ஆகியோரின் வீடுகளில் நேற்று, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து, 2வது நாளாக குணசீலன் உள்ளிட்டோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நேற்று நடைபெற்ற சோதனையில், குணசீலன் வீட்டில் இருந்து இரண்டு லேப்டாப்கள், பென்டிரைவ், மெமரி கார்டுகள், கேமரா, வங்கி பாஸ் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, கஞ்சா கடத்தல் வழக்கில் கல்லார் பகுதியில் மேலும் ஒரு படகை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், படகின் உரிமையாளர் பாக்யராஜை நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து தலைமறைவான கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச மதிப்பில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற பிரபல ‘நாகை மீனவன்’ யூ-டியூபர்ஸ் வீடுகளில் 2வது நாளாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.