ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார் - ஆர்.எஸ்.பாரதி

 
RS-Bharathi

மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க மாலைக்குள் அழைப்பு விடுப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. புதிய ஆட்சியை ஏற்படுத்த முறைப்படி திமுக சட்டமன்ற தலைவரை தேர்வு செய்ய திமுக எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற திமுக. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக சட்டமன்ற தலைவராக மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று (மே 5) காலை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றனர்.

அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அவரிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். நாளை மறுநாள் 7-ந் தேதி முதல்வராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இதையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க மாலைக்குள் அழைப்பு விடுப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார். 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்” என்று கூறினார்.

ஆட்சி அமைக்க கவர்னர் முறைப்படி அழைப்பு விடுத்ததும் அமைச்சரவை பட்டியலை நாளை மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநரை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்ததைத் தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்த புல்வெளி மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அங்கு சுமார் 200 பேர் அமரும் வகையில் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடைபெறுகிறது.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web