தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறை: சட்டப்பேரவை நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பு!

 
TN-Assembly

தமிழ்நாட்டு சட்டப்பேரவை வரலாற்றில், முதன்முறையாக கேள்வி நேரமானது நேரலையில் ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது.

முன்னாள் ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படது. மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியது. முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது. வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது என கூறினார்.

கீழ்வேளூர் தொகுதியில் திருப்பூண்டி அருகே உள்ள கீரனேரி ஏரியை ஆழப்படுத்த உறுப்பினர் நாகை மாலி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். உறுப்பினரின் கோரிக்கை ஏற்கப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

ஒட்டப்பிடாரத்தில் அரசு கல்லூரி அமைக்க உறுப்புனர் சண்முகையா கோரிக்கை வைத்தார்.

ஒட்டப்பிடாரத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன  என அமைச்சர் பொன்முடி பதில்  அளித்தார்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா என உறுப்பினர் அண்ணாதுரை கேள்வி எழுப்பினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட 25 நகராட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

ஒசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.  ஒசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதில் அளித்தார்.

வேளச்சேரி ஒரு வழிப்பாலத்தை இருவழியாக மாற்ற வேண்டும் என  உறுப்பினர் ஹசன் மவுலானா கோரிக்கை வைத்தார். சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இருவழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கூறினார். கூட்டுறவுத்துறை சார்பில் கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

சேலம் கோழிக்கால்நத்தம்- வடுகப்பட்டி- வைகுந்தம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்என உறுப்பினர் ஈஸ்வரன் கோரிக்கைவைத்தார். சாலையை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கோவில்பட்டியில் தொழில்பூங்கா அமைக்கப்படுமா? என  உறுப்பினர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட இடங்களில் சிப்காட் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பொள்ளாச்சியை தனி மாவட்ட அறிவிக்க பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை வைத்தார்.

10 ஆண்டு காலம் அதிமுகவால் முடியாததை திமுக செய்யும் என நம்புகிறார் பொள்ளாச்சி ஜெயராமன் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் கேள்விநேரம் சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

From around the web