வளர்ப்பு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்திய தம்பதி..! கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்
கோவையில் கர்ப்பிணி பூனைகளுக்கு, குடும்பத்தினர் வளைகாப்பு விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் உமா மகேஸ்வரன் - சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வீட்டில் அவர்கள் 2 பெண், ஒரு ஆண் உள்பட மூன்று பூனைகளை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களது 2 பெண் பூனைகளும் கருவுற்றது. பூனைகள் கர்ப்பமானது அருகில் இருந்த கால்நடை மருத்துவமனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.
அதையடுத்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. கைகளில் வளையலுக்கு பதில் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டன. பூனைகளை அலங்காரம் செய்து, நெற்றியில் பொட்டு வைத்து, சீர்வரிசையாக தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அங்கிருந்த பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இது முதல்முறை என்றும் இது பூனைகளை மகிழ்ச்சியாக்கும் என்றும் இந்த வளைகாப்பில் கலந்துகொண்ட விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.