சென்னையில் மொத்தம் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அறிவிப்பு

 
Out-of-a-total-of-39537-streets-in-Chennai-1158-streets

சென்னையில் உள்ள 1,158 தெருக்களில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1728 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 876 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று நிலவரப்படி கொரோனாவால் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 662 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஒமிக்ரான் பாதிப்பில் இந்தியாவில் தமிழ்நாடு 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் சீரான வேகத்தில் அதிகரிக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146  என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக அதிகரித்து 5 மடங்காக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 1,158 தெருக்களில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 170 தெருக்களில் 3க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 51 தெருக்களில் 5 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

அதேபோல் 988 தெருக்களில் 3க்கும் குறைவான கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தமாக 3,486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் காரணத்தால் தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கைகளை கையிலெடுக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே கடற்கரைக்கு செல்ல தடை, தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

From around the web