விரைவில் வருகிறேன்.. இனி ஒருநிமிடம் கூட பார்த்துக் கொண்டிருக்க முடியாது! சசிகலா அதிரடி முடிவு

 
Sasikala

நேரடி அரசியலில் மீண்டும் வர உள்ளதாக சசிகலா அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலிலிருந்து விலகியிருக்கப்போவதாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா.

சசிகலாவின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பல மாதங்களாக அமைதி காத்துவந்த சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆடியோ அரசியலை மேற்கொண்டு வந்தார். மாவட்டங்கள் தோறும் உள்ள தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில், விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் என சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள் தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்கமாட்டார்.

அதனையெல்லாம் பார்த்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் நம் பிள்ளைகள் தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள்.
கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

வரும் 16-ம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 17ம் தேதி காலை சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு செல்கிறார். தொடர்ந்து ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் செல்கிறார்.

அதன்பிறகு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web