அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 
Pongal-package-announced-by-stalin

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கபடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாற்றி வந்தனர்.

இந்நிலையில், அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடும் வகையில் கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன்.

இதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் நமது அரசுக்குப்பெரும் நிதி நெருக்கடி வரும் இச்சூழலிலும் மக்களின் நலன் கருதி 1,297 கோடி ரூபாய் செலவில் இத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாகச்சென்று நியாயவிலைக்கடைகளில் ஆய்வு செய்தேன்.

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தைப்பற்றி சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

எனவே இந்தப்பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும் தரமான பொருட்கள் எவ்விதப்புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

இதனைக்கருத்தில் கொண்டு நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கும் பணிகளை அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web