காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட  கொரோனா அறிகுறி இருக்கா..? ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்!!

 
School

காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது .

தமிழ்நாட்டில் கடந்த 1-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனாலும் பள்ளிகளுக்கு வருவதில் ஒரு சில மாணவர்களுக்கு தயக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில், பெற்றோர்களிடமும் தயக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கடலூரில் பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதே போல, நாமக்கல் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி, காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்பின், தொற்று இல்லை என்று தெரிந்து உடல் நலம் தேறிய பின், பள்ளிக்கு வந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்களை பொறுத்தவரை பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web