பெற்ற குழந்தைகளை மலையிலிருந்து வீசியெறிந்த தந்தை!
நாமக்கல்: பெற்று வளர்த்த இரண்டு குழந்தைகளை கொல்லிமலையிலிருந்து வீசியெறிந்து தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – பாக்கியம் தம்பதிக்கு 8 வயதில் மகனும், 5 வயதில் மகளும் இருந்தனர். சிரஞ்சீவிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்ட நிலையில், பாக்கியம் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தான் பெற்று வளர்த்த இரண்டு குழந்தைகளையும் செம்மேடு சீக்குபாறை பகுதியில் உள்ள வியூ பாயிண்ட்-க்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மலையிலிருந்து 250 அடி பள்ளத்தில் இரண்டு குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக வீசியெறிந்து சிரஞ்சீவி கொலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய தாய் பாக்கியம், குழந்தைகளை காணவில்லை என தேடியபோது, இரண்டு குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்து சிரஞ்சீவி அழுததை கண்டு சந்தேகம் அடைந்தார்.
இதையடுத்து, பாக்கியம் அளித்த புகாரின் பேரில், சிரஞ்சீவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தைகளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த காவல்துறையினர், அழுகிய நிலையிலிருந்த குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.