கருப்பினத்தவர்களுக்காக கூகுள் குரல் கொடுக்கும்! சுந்தர் பிச்சை அதிரடி ட்வீட்!
வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவிற்கு எதிராக கடுமையாகப் போராடி வருகிறது. அதே வேளையில் கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தால் முற்றுகைப் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போலீஸ் கஸ்டடியில் நடத்தப்பட்ட இந்த இறப்பிற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பல மாநிலங்களில் கலவரங்களும் ஆரம்பித்துள்ளதால் அமெரிக்காவின் 25 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நிலைமை கட்டுக்குள் வராத இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படுகின்றன.
இந்நிலையில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் அதிகரித்து வருவதால் வரலாற்றில் முதன்முறையாக வெள்ளைமாளிகையின் விளக்குகள் அணைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கூகுள் எப்போதும் குரல் கொடுக்கும். உலகின் அனைத்து மக்களும் சம உரிமையுள்ளவர்களே. துக்கத்தில் மூழ்கியிருப்பவர்களே உங்களுக்கு கூகுள் துணை நிற்கும். இன சமத்துவத்திற்கான கூகுளின் ஆதரவும், ஒற்றுமையும் தொடரும் என கூகுள் நிறுவனச் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ட்விட்டரில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.