சாம்பியன் மீண்டும் எழுச்சி பெறுவார்.. ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்த பிறகு முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை..!

ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட், கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரிஷப்பண்ட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஓராண்டுகள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
அதன் படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரிஷப் பந்த். இது ஒருபுறமிருக்க, அவர் தன்னை மீட்டுக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். சிறு சிறு உடற்பயிற்சிகள், நீச்சல் போன்ற பயிற்சிகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ரிஷப் பந்த் வீட்டுக்கு வந்து அவரை நேரில் சந்தித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங், மீண்டும் கிரிக்கெட் ஆடினார்.
தன்னுடைய அனுபவத்தையும், முயற்சியையும் ரிஷப்பிடம் கூறி, அவரை உற்சாகப்படுத்தவே யுவராஜ் சிங் வந்ததாக தெரிகிறது. யுவராஜ் சிங்கின் இந்த வருகையால் ரிஷப் பந்த், தன்னம்பிக்கை பெற்றார். இளம் வீரராக இந்திய அணியின் நன்மதிப்பை பெற்ற ரிஷப் பந்த், மீண்டும் அணிக்கு திரும்ப, யுவராஜ் சிங்கின் வருகை அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கும்.
தன்னுடைய இந்த வருகைக்குப் பின், யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘குழந்தை ஒரு அடி எடுத்து வைத்துள்ளது, இந்த சாம்பியன் மீண்டும் திரும்ப வருகிறார். நன்றாக பிடிக்கவும், சிரிக்கவும். என்ன ஒரு பையன் எப்போதும் நேர்மறை மற்றும் வேடிக்கையானவன் !! உனக்கு நிறைய சக்தி இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.