சால்ட் அதிரடி அரைசதம்.. லக்னோ அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

 
KKR vs LSG

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குவிண்டன் டிகாக் களமிறங்கினர். டிகாக் 10 ரன்னில் வெளியேற அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்னிலும், கேப்டன் ராகுல் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

KKR vs LSG

அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் கொல்கத்தா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 45 ரன்கள் குவித்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் மிச்சேல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், வைபவ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா தொடக்க வீரர்களாக சுனில் நரைன், பிலிப் சால்ட் களமிறங்கினர். நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்துவந்த ரகுவன்சி 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

KKR vs LSG

பின்னர், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய சால்ட் அரைசதம் கடந்தார். இறுதியில் கொல்கத்தா 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் சிறப்பாக ஆடிய பிலிப் சால்ட் 89 ரன்களுடனும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.  

From around the web