மும்பையை தெறிக்கவிட்ட சென்னை... 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

 
CSK

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீனும், இஷான் கிஷனும் களமிறங்கினர். கிரீன் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார். இதனால், மும்பை அணி தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. 

MI

இதனை தொடர்ந்து நிஹால் வதேராவும், சூரியகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சூர்யகுமார் யாதவு 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வதேரா, அரைசதம் கடந்தார். அவர் 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டிகளில் அதிரடியில் மிரட்டி வந்த டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், மும்பை பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினர். 

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டிவோன் கான்வேயும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கெய்க்வாட் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரஹானே 21 ரன்களும், ராயுடு 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கான்வே 44 ரன்கள் எடுத்தார். 

CSK

மும்பை அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட சென்னை பேட்ஸ்மேன்கள், அவ்வபோது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். சென்னை அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த மும்பை பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

From around the web