அபார பந்துவீச்சு.. வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி

 
Ind vs Ban

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளும், குரூப்-2ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து விராட் கோலி உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் விராட் 37 ரன்னிலும், பண்ட் 36 ரன்னிலும் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Ind vs Ban

இதையடுத்து ஷிவம் துபே மற்றும் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய துபே 34 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அக்சர் படேல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சகிப், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் சார்பில் லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸிட் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் லிட்டன் தாஸ்  13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து தன்ஸிட் ஹசன் 29 ரன்களும், அடுத்து களமிறங்கிய ஷிருதய் 4 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். 

Ind vs Ban

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹூசைன் சாண்டோ 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜாக்கர் அலி 1 ரன்னும், அதிரடி காட்டிய ரிஷத் ஹூசைன் 24 ரன்களும், முகமதுல்லா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மெஹதி ஹசன் 5 ரன்களும், ஹசன் சாகிப் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காள தேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

From around the web