முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி!!

 
IND vs NZL

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று (ஜன. 18) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.தொடக்க விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி 8 ரன்களும், இஷான் கிஷன் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் சுப்மன் கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார்.

Shubham Gill

தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் இரட்டைசதம் அடித்து அசத்தினார். அவர் (19 பவுண்டரி , 9 சிக்ஸர்) 208 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 350 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.

தொடக்கத்தில் டெவான் கான்வே 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பின் ஆலன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்ரி நிகோல்ஸ் 18 ரன்களும், டேரில் மிட்சேல் 9 ரன்களும், கிளென் பிலிப்ஸ்11 ரன்களும் கேப்டன் டாம் லேதம் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல், சாண்ட்னெர் இருவரும் இனைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு ரன்கள் குவித்தனர்.

Bracewell

நிலைத்து ஆடிய இருவரும் அதிரடியாக ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். சாண்ட்னெர் அரைசதம் அடித்தார். பின்னர் அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பந்துகளை சிக்ஸர், பவுண்டரிக்கு பறக்க விட்ட பிரேஸ்வெல் வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். மறுமுனையில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை தாக்கூர் வீசினார்.

ஓவரின் முதல் பந்தை பிரேஸ்வெல் சிக்சருக்கு பறக்க விட்டார். 2வது பந்து ஒயிட் , 3வது பந்தில் எல்.பி. டபிள்யு முறையில், ( 12 பவுண்டரி , 10 சிக்ஸர் ) 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், குல்தீப் யாதவ் , தாக்கூர் தலா 2 விக்கெட், ஹர்திக் பாண்டியா, ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முண்ணிலை வகிக்கிறது.

From around the web