தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை எப்போது..? அரசு தலைமை காஜி அறிவிப்பு

 
Ramzan

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது. பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பை துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பை கடைப்பிடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மார்ச் 12-ம் தேதிதான் பிறை தெரிந்தது. இதனால்தான் ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது. சுமார் 30 நாட்கள் விரதமிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

Ramzan

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறதா? இல்லை நாளை கொண்டாடப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி நேற்று பிறை தெரியாததால் தமிழ்நாடு, புதுவையில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “பிறை தேட வேண்டிய நாளான ஏப்ரல் 9-ம் தேதி தமிழ்நாட்டின் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டது. அதன்படி ஏப்ரல் 9 மஹ்ரிபில் இருந்து தமிழ்நாட்டில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 10) நோன்பு பெருநாள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramzan

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் இன்று ரம்ஜான் என அறிவிக்கப்பட்டாலும் கூட அரசு தலைமை காஜி இன்று இல்லை. நாளை தான் தமிழ்நாடு, புதுச்சேரியில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web