திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம்.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..

 
TV Malai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவத்தை முன்னிட்டு 63 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்ச விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் திருக்கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

TVmalai

நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும். அதில் ஆடி மாதத்தில் தட்சிணாயன புண்ணியகால உற்சவமும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை மகா தீபத்தின் போதும், ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோர்சவ உற்சவமும், மார்கழி மாதத்தில் உத்திராயண புண்ணியகால உற்சவம் உள்ளிட்ட ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று மார்கழி மாத உத்தராயன புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அலங்காரத்துடன் 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரம் அருகே எழுந்தருள இன்று காலை சரியாக 6.20 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

TVMalai

10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் திட்டு வாசல் வழியாக வெளியே சென்று திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள், பத்தாம் நாளான தை பொங்கல் அன்று தாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று பத்து நாள் உற்சவம் நிறைவு பெறும்.

From around the web