திருச்சானூர் பத்மாவதி கோவில் பிரம்மோற்சவ விழா.. கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன். மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு.
பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.
இந்த நிலையில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை (நவ. 10) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 18ம் தேதி வரை விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்த பின்னர், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இன்று அங்குரார்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் 18-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சிக்காக ரூ.9 கோடி செலவில் புஷ்கரணி நவீனமயமாக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ நிகழ்வுகள்:
நவம்பர் 10: காலை - த்வஜாரோஹணம், இரவு - சின்ன சேஷ வாகனம்
நவம்பர் 11: காலை - பெத்த சேஷ வாகனம், இரவு - ஹம்ச வாகனம்
நவம்பர் 12: காலை - முத்தையாபு பாண்டிரி வாகனம், இரவு - சிம்ம வாகனம்
நவம்பர் 13: காலை - கல்ப விருட்ச வாகனம், இரவு - ஹனுமந்த வாகனம்
நவம்பர் 14: காலை - பல்லகி உற்சவம், இரவு - கஜ வாகனம்
நவம்பர் 15: காலை - சர்வ பூபால வாகனம், இரவு - கருட வாகனம்
நவம்பர் 16: காலை - சூர்யபிரபை வாகனம், இரவு- சந்திரபிரபை வாகனம்