விஜய் சேதுபதிக்காக கவிதை எழுதிய சீனு ராமசாமி!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளுக்காக இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய கவிதை பாடலாக பதிவாகிறது.
இந்த கவிதை பற்றி கூறிய சீனு ராமசாமி, “நான் இதை எழுத பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் எழுதியது என்னவோ அரை மணி நேரத்தில் சேதுவின் நற்குணத்தை செய்து வரும் நற்காரியங்களை நினைத்ததும் வரிகள் உள்ளத்தில் நெகிழ்ந்து அன்பாக நேசமாக கண் நேரத்தில் வந்தது “என்கிறார்.
இயக்குனர் சீனு ராமசாமியின் இந்த கவிதையைப் படித்த இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன், பாடலாக்கி விடலாம் என்று கூறி மெட்டமைத்திருக்கிறார். இந்தப் பாடல் விரைவில் வெளிவரும் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
விஜய்சேதுபதியை வாழ்த்தி சீனு ராமசாமி எழுதிய கவிதை இதோ,
ரசிகனை ரசிக்கும்
ரசிகனே வா
ரசித்தவர் மனங்களின்
தலைவனே வா
இலக்கணம் எமக்கில்லை
என்றவன் வா
தலைக்கணம் தமக்கில்லை
உணர்ந்தவன் வா
மக்கள் செல்வா
உந்தன் மங்காதப் புகழ் சொல்லவா
மக்கள் செல்வா
இந்த மண்ணின் மகன் நீ அல்லவா
தர்மத்தின் தலைமகன்
தந்ததை மறப்பவன்
பெற்றதை நினைப்பவன்
பெருமைகள் சேர்ப்பவன்
பசித்தவர் அறிந்தே
தன் இரைப்பையில் இருந்தே
எடுத்து தருபவன்
உண்பதை தந்தான்
மிச்சத்தை உண்டான்
தன் மனம் அறிந்தான்
அவ மானம் கடந்தான்
திரையில் நடிப்பவன்
தரையில் நடப்பவன்
தாயை போலவன்
தந்தை குணத்தவன்
முயன்றவர் தோற்றவர்
தன்
தன்னுடன் இணைத்தே
வெற்றியை தந்தவன்
கலைதவம் செய்தான்
தன்னுழைபை விதைத்தான்
உள்ளத்தால் சிரித்தான்
எண்ணத்தால் உயர்ந்தான்
விஜய் சேதுபதி எனும்
மனிதா
விஜய் சேதுபதியே
மாமனிதா
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த சீனு ராமசாமி, தர்மதுரை படத்தின் மூலம் மிகவும் முக்கியமான வெற்றியையும் விஜய் சேதுபதிக்குப் பெற்றுத் தந்துள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து இடம் பொருள் ஏவல் படத்தை முடித்து விட்ட சீனு ராமசாமி மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் படத்தை எடுத்து வருகிறார்.