சிகாகோ 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! # FeTNA32 #WTC10 #CTS50
டெல்லி: 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிகாகோவில் ஜூலை 4ம் தேதி தொடங்கி 4 நாட்கள் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32 வது ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு,
“சிகாகோவில் ஜூலை 4 முதல் 7 வரை நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான பெருமைகள் உண்டு. மக்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய சக்தி மொழி ஆகும்.
தமிழ் மொழி உலகின் தொன்மை வாய்ந்த அழகான ஒரு செம்மொழி. தமிழ் மொழியின் இலக்கியங்கள் உலகின் சிறப்பு மிக்க ஒன்றாகும். சங்க இலக்கியம் தொடங்கி பிற்காலத்தின் பக்தி இலக்கியம், திருவள்ளுவரின் வாழ்க்கை நெறி தத்துவங்கள், பாரதியாரின் தேசப்பற்று கவிதைகள் எல்லாமும் தமிழ் மொழியின் பொக்கிஷங்கள்.
ஒரு மொழியை கற்பது என்பது அது சார்ந்த கலாச்சாரம், பண்பாடு, மக்களின் வாழ்வியல் வரலாறு என அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாகும். தமிழ் மொழி இதற்கான சிறந்த சான்றாகும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, தமிழ் மொழியை உலகின் பல பகுதிகளிலும் மேலும் பரவச் செய்ய உதவியான முயற்சியாகும். இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம், பண்பாட்டையும், அழகான தமிழ் மொழியின் தனித்துவத்தையும் உலக அரங்கில் பறைசாற்றும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உற்சாகம் தந்து, தமிழ் மொழியின் சிறப்புகளை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல தூண்டுதலாக இருக்கும் என்று நம்புகிறேன். இளைஞர்கள் தங்கள் மொழியைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது, அவர்களுடைய பங்களிப்பும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இளைஞர்கள் நம்முடைய பெருமை வாய்ந்த மொழிகளில் படிக்கவும், எழுதவும் செய்து, மொழிகளை மேலும் வளப்படுத்தவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்து தமிழ் மொழியை மேலும் உயர்வடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்,” என்று பிரதமர் மோடி தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தாய் வாழ்த்து, திருக்குறள் மறை ஓதுதல், அமெரிக்க தேசிய கீதம், மங்கல இசையுடன் சிகாகோவில் முப்பெரும் விழா தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதத்தை வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி விழா மேடையில் வாசித்தார்.
உலகமெங்கும் இருந்தும் சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் சிகாகோவில் கூடியுள்ளனர். தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் தமிழறிஞர்களும் பங்கேற்க வருகை தந்துள்ளார்கள்.
– வணக்கம் இந்தியா