அமெரிக்காவில் பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு- கி.வீரமணி பங்கேற்பு
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் வட்டாரப்பகுதியில் பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு நடைபெற உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பெரியார் பன்னாட்டு மாநாடு, இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு பெரியார் மய்யமும், (Periyar International, USA) அமெரிக்க மனிதநேயர் சங்கமும் (American Humanist Association) சேர்ந்து இந்த மாநாட்டை நடத்துகின்றனர்.
மேரிலாந்து பகுதியில் அமைந்துள்ள மாண்ட்கோமரி கல்லூரி வளாக பண்பாட்டு கலை மய்யத்தில் செப்டம்பர் 21, 22 தேதிகளில் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மனிதநேயர் அமைப்பினர், பகுத்தறிவாளர்கள், அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டின் இரண்டு நாட்களும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி உணர்வாளர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 50 பேராளர்கள் பங்கேற்கிறார்கள்.
சமூகநீதிக்கான வீரமணி விருது
அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யம் சமூகநீதிக்காகப் பாடுபட்டு வரும் தலைவர்கள், அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருதினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்கள்.
2019ஆம் ஆண்டுக்கான ‘சமூகநீதிக்கான வீரமணி விருது ஜெர்மனி நாட்டைச் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ்-க்கு வழங்கப்படுகிறது.பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர்களான டாக்டர் சோம. இளங்கோவன், முனைவர் இலக்குவன் தமிழ் ஆகியோர் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ்- க்கு இந்த விருதினை வழங்குகின்றனர்.
முனைவர் உல்ரிக் நிக்லஸ் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மன் நாட்டுக் கிளையின் தலைவராக உள்ளார். 2017ஆம் ஆண்டில் ஜெர்மனி – கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டினை ஏற்பாடு செய்து நடத்தியவர்.
மாநாட்டு ஏற்பாட்டை செய்து வரும் மற்றொரு அமைப்பான அமெரிக்க மனிதநேயர் சங்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு, 2019ஆம் ஆண்டிற்கான ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது (2019 Humanist Lifetime Achievement Award) வழங்குகின்றது. அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் விருதினை வழங்குகிறார்.
முதல் நாள்
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் டாக்டர் சோம இளங்கோவன் மற்றும் ராய் ஸ்பெக்ஹார்ட் ஆகியோர் வரவேற்கின்றனர். தர்லாந்து நாட்டு தமிழர் அறிஞர் முனைவர் கண்ணபிரான் ரவி சங்கர் மாநாட்டின் அறிமுக உரை ஆற்றுகிறார்.
முற்பகல் நிகழ்வில் பிலிப் மொல்லர் (ஜெர்மனி), ரெப். ஜாமி ரஸ்கின் (அமெரிக்கா), டோனி வேன் பெல்ட் (அமெரிக்க பெண்ணிய அமைப்பு) வீ. குமரேசன் (பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம், வல்லம் தஞ்சாவூர்) முனைவர் ரியான் பெல் (மதச்சார்பற்ற மாணவர் கூட்டமைப்பு) ஆகியோர் உரையாற்றுகின்றனர். பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் அமெரிக்காவில் உள்ள புலம் பெயர்ந்தோரின் மனிதநேயம் சுயமரியாதைபற்றி கலந்து உரையாடுகின்றனர்.
பிற்பகல் நிகழ்வில் முனைவர் உல்ரிக் நிக்லஸ் (ஜெர்மனி) உரையாற்றுகிறார். முனைவர் மாதிவி போட்லுரி, நாம் ஆர். ஆலன், கிளாரா ஆர்தர் மற்றும் அருள் வீரமணி ஆகியோர் கலந்து உரையாடுகின்றனர். கோ. கருணாநிதி (அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ‘சமூகநீதிச் சவால்கள்’ குறித்துப் பேசுகிறார் மற்றும் முனைவர் ஆர். பிரபாகரன், டெப்பி ஆலன் (அமெரிக்க மதசார்பின்மை அணி) ஆகியோர் உரையாற்று கின்றனர். மாலை இணையதளத்தில் உலகளாவிய போட்டி நடைபெற உள்ளது.
இரண்டாம் நாள்
முற்பகல் நடைபெறும் அமர்வில் சுயமரியாதை மனிதநேயம் (Self Respective Humanism) பற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ் பேராசிரியர் அமெரிக்கா அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் செவ்வியல் தமிழில் சுயமரியாதை எனும் தலைப்பிலும் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் மனிதநேயமும் திராவிட இயக்கமும் எனும் தலைப்பிலும், எழுத்தாளர் ப. திருமாவேலன் மனிதநேயமும், பெரியாரும் எனும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.
முனைவர் ஸ்வென் வொர்ட்மேன் (ஜெர்மனி) டெப்பி கோடார்டு ஆகியோர் மனிதநேயத் தத்துவம்பற்றி உரையாற்றுகின்றனர். பிற்பகல் நிகழ்வாக – தமிழ், ஆங்கில மொழி நிகழ்ச்சிகள் தனித்தனி அமர்வுகளாக நடை பெறுகின்றது.
தமிழ் அமர்வின் தொடக்கவுரையினை கவிஞர் கலி. பூங்குன்றன் (திராவிடர் கழகம்) வழங்குகின்றார். கலந்துரையாடலை ப. திருமாவேலன், நாஞ்சில் பீட்டர் குழுவினர் நடத்துகின்றனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன், ‘மனிதநேயமும் சமூகநீதியும்‘ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ் தேசியமும் பெரியாரும் எனும் தலைப்பில் ப. திருமாவேலன் பேசுகிறார். குழு சார்ந்த செயல்பாடு பற்றி தமிழர் தலைவரும், பிற முக்கிய விருந்தினர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
நிறைவு
ஆங்கில அமர்வில் அமெந்தா பாப்பெய், முனைவர் கேரி பெர்ஜ் – கிராஸ், பிரெட் எட்வர்டுஸ், சோனிஜா டேவிஸ் ஆகியோர் மனிதநேயச் செயல்பாடு பற்றிப் பேசுகின்றனர். மாநாட்டின் நிறைவாக, ஆங்கிலத்தில் பிரெட் எட்வர்டுஸ் உரைக்குப் பின்னர் ‘எதிர்காலம்’ தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிறைவுரை ஆற்றுகிறார்.
அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், அமெரிக்க மனிதநேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக் ஹார்ட் இருவரும் இணைந்து நன்றியுரை வழங்க மாநாட்டு நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன.
இரண்டாண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் இந்த மாநாடு மூன்று நாட்கள் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.