கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்… தமிழுக்காக அட்லாண்டாவில் ஒரு கலந்துரையாடல்!

அட்லாண்டா மாநகரில் உள்ள தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் முனைவர். அமிர்தகணேசன் (அகன்) தலைமையில் “கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்” என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. முறையான ஆசிரியர் பயிற்சியும், முறையான தமிழ்க்கல்வியும் பெற்றுள்ளாத போதும், தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் களமிறங்கி உள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து கலந்துரையாடலை தொடங்கினார் முனைவர் அமிர்த கணேசன். உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மொழிகளுக்குள் செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கும் ஆறு மொழிகளில் ஒன்றான தமிழின் சிறப்பை குறிப்பிட்டவர், நன்னூலில் சொல்லப்
 

கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்…  தமிழுக்காக அட்லாண்டாவில் ஒரு கலந்துரையாடல்!ட்லாண்டா மாநகரில் உள்ள  தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் முனைவர். அமிர்தகணேசன் (அகன்) தலைமையில் “கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்” என்ற கலந்துரையாடல் நடைபெற்றது.

முறையான ஆசிரியர் பயிற்சியும், முறையான தமிழ்க்கல்வியும் பெற்றுள்ளாத போதும்,  தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் களமிறங்கி உள்ள  தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து கலந்துரையாடலை தொடங்கினார் முனைவர் அமிர்த கணேசன். 

உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மொழிகளுக்குள் செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கும் ஆறு மொழிகளில் ஒன்றான தமிழின் சிறப்பை குறிப்பிட்டவர், நன்னூலில் சொல்லப் பட்டிருக்கும், இன்றும் பொருந்தக் கூடிய ஆசிரியர் மற்றும் மாணவருக்கான விதிகள் பற்றி எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கினார். 

பல்வேறு சமயங்களைப் பரப்ப வந்தவர்கள், தமிழைக் கையில் எடுத்துக் கொண்டு, நமக்கு விட்டுச் சென்ற இலக்கியப் பெட்டகங்களை நாம் திறந்து பார்த்து உணர வேண்டியதன் அவசியம் பற்றி தகவல்களையும் உத்திகளையும் பகிர்ந்து கொண்ட போது அவர் குறிப்பிட்டதாவது,

பயனுள்ள தகவல்களும், உத்திகளும் 

“மகாகவி பாரதியார் தமிழ்க் கவிதையில் புதிய வடிவத்தைச் சொல்லிலும், சுவையிலும்,  பொருளிலும் அளித்து வசன கவிதை வகைமையையும் அறிமுகப்படுத்தினார். அவர்  வழித்தோன்றலென பாரதிதாசன் தமிழ்க்கவிதைக்கு அரும் பணியாற்றினார். மரபு நடையை மாற்றி, புதுக்கவிதை வகைமையை வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் தமிழுக்கு அளித்தனர். ஆனாலும் வானம்பாடி இயக்கத்தின் கவிஞர்கள் மரபு நெறி இலக்கணம்

நன்கு அறிந்திருந்தனர். எனவேதான் அவர்களின் புதுக்கவிதைகள் இன்றும் தமிழில் உணர்வுடன் ஒளி வீசி வருகின்றன. கவிதைக்காக யாப்பிலக்கணம் மீறப்படலாம். கற்று மீறுவது சுவை தர வல்லது. இலக்கண விதிகள்தாம் மொழியின் மாண்புக்கான உயிர்நாடி. இவற்றை ஆசிரியர்கள் முதலில் புரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு எளிய எடுத்துக்காட்டுகள், உரையாடல்கள், பாட்டுகள், கதைகள் மூலம் கற்பிக்கலாம்.

பொருள் தரக் கூடிய ஓரெழுத்துச் சொற்கள் தமிழில் மிகுதி. இவற்றைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள வைக்கலாம். “ஓர்/ஒரு” பயன்பாடு, ஒருமை/பன்மை, உயர்திணை/அஃறிணை, சொற்களில் இடைவெளி மாறினால் வெளிப்படும் வேறு பொருள், ஒற்று மிகும்/மிகா இடங்கள் என்று படிப்படியாகக் கற்றுத் தரலாம்.

குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் விளையாட்டு கலந்த கல்விமுறையை அறிமுகம் செய்யலாம். எடுத்துக்காட்டாக, திருக்குறள் அதிகாரத்தின் பெயரையும், ஏழு சீர்கள் கொண்ட குறளையும், எட்டு அசைவுகள் கொண்ட உடற்பயிற்சியோடு கற்றுத் தரலாம். இதை அனைத்து வகுப்பு மாணவர்களையும் பேரவையில் ஒருங்கிணைத்துச் செய்ய வைப்பது, அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்.

உயர்நிலைப் பள்ளியில் அந்நிய மொழிப்பாடத்துக்கான மதிப்பீடு கிடைக்க வாய்ப்பிருப்பதைத் தெரிவித்து ஆர்வத்தைத் தூண்டலாம். “ஒலி தான் மொழியை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்களிக்கிறது. ஆசிரியர்கள் உச்சரிப்பைச் சரியாகச் சொல்லிக் கொடுத்து, பிற மொழிகளின் தாக்கம்/கலப்பு இல்லாமல் பாடம் நடத்துவது, பேச வைப்பது, மொழியின் சிதைவைத் தவிர்க்கப் பெரிதும் உதவும்” என்று குறிப்பிட்டார்.

“கொஞ்சம் கதை” பகுதியில் சுலபமான தலைப்பைக் கொடுத்து, ஆசிரியர்களை எட்டு வரிகளில் புழந்தைகளுக்குப்  புரியும் வகையில் கதை அல்லது பாட்டு எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார் முனைவர் அமிர்தகணேசன்.

நிகழ்ச்சிக்கிடையில், பேராசிரியர் மருத்துவர் ச. இளங்கோவன் படைத்த “இதயச் சாரல்” என்ற நூல் வெளியிடப்பட்டது. முதல் இரண்டு பிரதிகளை சங்கத் தலைவர் குமரேஷிற்கும், லில்பர்ன் தமிழ்ப்பள்ளி முதல்வர் ரவி பழனியப்பனுக்கும் வழங்கிய முனைவர் உதயகுமார்,  புத்தக ஆசிரியர் பற்றியும், சிலப்பதிகாரச் சிறப்புகள் பற்றியும் உரையாற்றினார். 

நிகழ்ச்சியின் நிறைவாக, பயிற்சியின் போது பங்கேற்றவர்களுக்கு மகாகவி ஈரோடு தமிழன்பன் எழுதிய நூல்கள் வழங்கப்பட்டது. அறிவியலாளர், தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர் என்று பன்முகத்துடன் செயல்பட்டு வரும் முனைவர் அமிர்தகணேசன்,  புதுச்சேரியில் “இணையதளப் பேரவை” என்ற அமைப்பின் மூலம் மகாகவி தமிழன்பன் பெயரில், பல இளம் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் விருதுகளை வழங்க ஊக்குவித்தும் வருகிறார். 

ஆல்ஃபெரட்டா நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் சார்பில் செய்திருந்தார்கள். சங்கத் தலைவர் குமரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.  தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வப் பணியாற்றும் ஆசிரியர்களும், தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சங்க செயற்குழு உறுப்பினர் சங்கர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

இது போன்ற பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு அளித்து, அவர்களின் கற்பனை வளம்,  புத்தாக்கத் திறன் ஆகியவற்றை வெளிக் கொணரலாம். ஆசிரியர்களுக்கும் இத்தகைய பயிற்சிகள் உதவியாக இருக்கும் என்றும் நம்பலாம்.

-ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா

From around the web