திருப்பதியில் தினமும் 3 ஆயிரம் தரிசன டிக்கெட்கள் விற்பனை!
கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் வாசிகள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூன் 11ம் தேதி முதல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் முதல் கட்டமாக நாள் ஒன்றுக்கு சுமார் 6,000 முதல் 7,000 பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் என்ற வீதத்தில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
காலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயது நிரம்பாத குழந்தைகளுக்கும் திருமலையில் அனுமதி கிடையாது. அதே போல் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்களுக்குக்கும் அனுமதி கிடையாது.
இதற்கான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுக்கள் ஜூன் 8ம் தேதி முதல் வெளியிடப்படும். தினமும் 3000 ஆன்லைன் டிக்கெட்டுகளும், 3000 ஆஃப்லைன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.
தரிசனத்துடன் விடுதி முன்பதிவையும் செய்து கொள்ளலாம் எனவும், ஒரு அறையில் இரண்டு பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.