கவர்னர் ஆனார் தமிழிசை சௌந்தரராஜன்!
டெல்லி: தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளான டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப் பட்டார். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக மகளிரணித் தலைவி கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை தோல்வியை தழுவினார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழிசைக்கு, கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநராக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என்று நம்புவதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
தமிழிசை தெலங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ளதை அடுத்து, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளது.
– வணக்கம் இந்தியா