அரசியல் , மத நோக்கத்திற்காகவே பாஜக மக்கள் தொகை பிரச்சனையை கையில் எடுத்துள்ளது - சசிதரூர் குற்றச்சாட்டு!

 
Yogi-shashi-tharoor

அரசியல், மத நோக்கத்திற்காகவே பாஜக மக்கள் தொகை பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2021-2030-ம் ஆண்டுக்கான புதிய மக்கள் தொகை வரைவு மசோதாவை ஜூலை 11-ம் தேதி தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில், 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடையாது என்றும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அசாமிலும் “கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிற அரசாங்க திட்டங்களுக்கும் மக்கள் தொகை விதிமுறைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குச் சட்டங்களைக் கொண்டு வரும் முயற்சிக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக எம்.பிக்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் குறித்த தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி சசிதரூர், அரசியல் மற்றும் மத நோக்கம் கொண்ட இந்த சட்டத்தை பாஜக கொண்டுவருவதாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் கூறுகையில், “மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து இப்போது பேசுவது முற்றிலும் தவறான ஒன்று. நாட்டின் பல மாநிலங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தில் மாறுபட்ட நிலைகளைக் கொண்டிருக்கின்றன. அரை நூற்றாண்டாக இது கருத்தில் கொள்ளப்படாத விஷயமாகவே இருக்கிறது.

இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போவது மக்கள் தொகை அல்ல. முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்புதான். அடுத்து வரும் ஆண்டுகளில் மக்கள் தொகையில் வளர்ச்சி இருக்காது. நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவாலைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மூன்று மாநிலங்களும் பேசுவது தற்செயலானது அல்ல. அவர்கள் உள்நோக்கத்துடன் யாருக்கா இந்த சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்கள் மக்கள் தொகை விவகாரங்கள் குறித்து உண்மையில் ஆய்வு செய்யவில்லை. அவர்களுடைய நோக்கம் என்பது அரசியல் மற்றும் மத நோக்கம் கொண்டதுதான்” என தெரிவித்துள்ளார்.

From around the web