மெழுகுவர்த்தி ஏற்றிய ரஜினிகாந்த்! விளக்கேற்றிய ரத்தன் டாட்டா!
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீட்டிற்கு வெளியே நின்று மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கொரோனா வைரஸ்-ஐ கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நாட்டுமக்களின் ஒற்றுமையை காட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது செல்போன் டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்து இருந்தார்.
அறிவியல் பூர்வம் இல்லாதது என்று இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்த போதும், பெரும்பாலான மக்கள் விளக்கு ஏற்றி பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தொழிலதிபர் ரத்தன் டாட்டா உள்பட பல பிரபலங்களும் விளக்கேற்றி அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துள்ளனர்.
சென்னையில் போயஸ்தோட்டம் வீட்டிலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு மனைவி லதாவுடன் மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளார். பின்னர் மெழுகுவர்த்தியுடன் கேட்டிற்கு வெளியே வந்து பிரதமருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
வேட்டியும் சந்தனக்கலர் ஜிப்பாவும் அணிந்துள்ள ரஜினி, கண்ணில் கண்ணாடியுடன், காலில் சாதாரண ரப்பர் செருப்பு அணிந்து ரோட்டில் வந்து மெழுகுவர்த்தியை கையை உயரமாகத் தூக்கிப் பிடித்தபடி ஏந்தி நின்றுள்ளார்.
ரஜினியின் வழியில் அவருடைய தீவிர ரசிகரான நடிகர் ஜீவா தனது வீட்டில் மின்விளக்கை அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏராளமான ரஜினி ரசிகர்களும் மெழுகுவர்த்தி, விளக்கேற்றி பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.