அடுத்த விக்கெட்... பாஜக அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா.. கலக்கத்தில் பாஜக!!
உத்திர பிரதேசத்தில் ஆயுஷ்துறை அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் சட்டமன்றதிற்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், கைப்பற்ற எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டுகின்றன.
இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து மூத்த அமைச்சரான (தொழிலாளர் நலத்துறை) சுவாமி பிரசாத் மவுரியா (வயது 68) திடீரென பதவியை ராஜினாமா செய்தார். பதவியை விட்டு விலகிய சிறிது நேரத்தில் அவர் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அவரை தொடர்ந்து பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைச்சர் தாரா சிங் சவுகானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கட்சிக்கு மேலும் அதிர்சியை கொடுத்தது. இவரும் சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆயுஷ்துறை அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதனையடுத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். அவரை சமாஜ்வாதி கட்சிக்கு வரவேற்கிறேன் என அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி தாவல் தொடங்கி இருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 அமைச்சர்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.