தேசியக் கொடியை தெரிந்து கொள்வோம்..!
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று டில்லி செங்கோட்டையில் பிரதமரும், அந்தந்த மாநிலங்களில் முதல்வர்களும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துவது வழக்கம்.
அதேபோல, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவது வழக்கம்.
முதலில், நமது தேசியக் கொடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
நமது தேசியக்கொடி காவி, வெள்ளை, பச்சை என மூவர்ணங்களைக் கொண்டது.
மூவர்ணக் கொடியின் நடுவில், நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு.
கொடியை ஏற்றிய பிறகு, காவி நிறம் மேலாகவும், பச்சை நிறம் கீழாகவும் இருக்க வேண்டும்; தலைகீழாகக் கொடியை ஏற்றுவது அவமரியாதைக்குரிய செயலாகும்.
காங்கிரஸ் கட்சியின் கொடியும், தேசியக் கொடியின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால், கொடியை மாற்றி ஏற்றும் சம்பவங்களும் எப்போதாவது, எங்காவது நிகழ்கின்றன. எனவே, தேசியக் கொடிதான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஏற்ற வேண்டும்.

ஒன்றிய உள்துறை அமைச்சம், ‘பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது’ என்று, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
காகிதத் தாள்களைப் போல பிளாஸ்டிக் பேப்பர்கள் உடனடியாக மட்கும் பொருள் இல்லை என்பதால், தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.
தேசியக் கொடி அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2ன் படி, ‘தேசியக் கொடியை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களை மேற்கொண்டால், மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
விதிகள்:
இந்திய சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியும், குடியரசு தினம் ஜனவரி மாதம் 26ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதன்போது, நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிறது.
ஆனால், தேசியக் கொடி ஏற்றப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
இதை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். தேசியக் கொடிக்கென சில விதிகளை அரசு சட்டமாக்கி உள்ளது.
தற்போது, பொதுமக்கள் தங்கள் வீடு, அலுவலகம் மற்றும் கார் போன்ற இடங்களில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி கிடைத்துள்ளது.
ஆனால், இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தேசியக் கொடி பற்றிய விதிகள் தெரியாது.
அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்:
- 2002ம் ஆண்டு இந்திய தேசியக் கொடி சட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக் கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு.
- தேசியக் கொடியை சூரிய உதயத்திற்கு பின்புதான் ஏற்ற வேண்டும். அதேபோல, சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்பு, அதாவது மாலை 6 மணிக்குள் இறக்க வேண்டும்.
- 2005ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டு, ‘இந்திய தேசியக் கொடியை இடுப்பிற்குக் கீழே அணியக்கூடாது’ என்பது போன்ற சில விதிகள் எழுதப்பட்டு, மேம்படுத்தப்பட்டது. இதில், தேசியக் கொடியை கால்சட்டையாக அணிவதற்கு தடை விதித்துள்ளது.
- தேசியக் கொடியை, கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாளுதல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.
- எக்காள ஒலியுடன் தேசியக் கொடியை விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும்போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த, அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக் கூடாது.
- சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.
- கார்களில் கொடிகளைப் பறக்க விட விரும்பினால், நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.
- தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும்போது, வலப் பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும். மேலும், மற்ற கொடிகள் நிறைய இருந்தால், அனைத்து கொடிக்கும் முன்பு தேசியக் கொடி இருக்க வேண்டும்.
- இந்திய நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
- தேசியக் கொடியின் காவி நிறம் தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், பசுமையையும் செம்மையையும் குறிக்குமாறும் பொருள்படும்.
தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன்பு எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
