புதிய கொள்கைகளை ஏற்காவிட்டால் சட்ட நடவடிக்கை..! ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி நோட்டீஸ்

 
Twitter

புதிய ஐடி விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன.  

இதையடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது.

புதிய விதிகளின் படி புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பவை போன்ற பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்றிய அரசின் புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க மே 25-ந் தேதி வரை அவகாசம் தரப்பட்டது.

கூகுள், ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் ட்விட்டர் நிறுவனம் மட்டும்  புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

இந்நிலையில், புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில்  சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

From around the web