பெரிய மீசை வச்சது ஒரு குற்றமா..? கான்ஸ்டபிள் டிரைவருக்கு வந்த சோதனை!!
மத்திய பிரதேசத்தில் பெரிய மீசை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவருக்கு சோதனை ஏற்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச காவல் துறையில் சிறப்பு பொது இயக்குனருக்கான வாகன ஓட்டுனராக இருந்து வருபவர் ராகேஷ் ராணா. கான்ஸ்டபிள் டிரைவரான இவர் பெரிய, நீண்ட மீசையை வளர்த்து வருகிறார்.
காவல் பணியில் சீருடை அணியும் நபர்களுக்கென தனியாக விதிகள் உள்ளன. அதன்படி, மீசையை பெரிய அளவில் வளர்க்க அனுமதி இல்லை. ஆனால், கழுத்து வரை ராணா மீசை வளர்த்துள்ளார். அதனை சரி செய்யும்படி அவரது மூத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், இதனை அவர் கேட்டு கொள்ளவில்லை. இதனையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றிய தகவல் பல சமூக ஊடகங்களில் வெளிவந்து உள்ளது.
இந்த சஸ்பெண்டு உத்தரவை பிறப்பித்த உதவி ஐ.ஜி. பிரசாந்த் கூறும்போது, அவரது தோற்றம் பற்றி சோதனை செய்ததில், முடி வளர்த்தும், கழுத்து வரை மீசை வைத்தும் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து முடி வெட்ட அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவர் முடி வெட்டிய பின்பு விகார தோற்றத்துடன் காணப்பட்டார். அதிகாரியின் உத்தரவை பின்பற்றவில்லை.
நீண்ட முடி மற்றும் பெரிய மீசை வைப்பதில் பிடிவாதமுடன் ராணா இருந்துள்ளார். காவல் பணிக்கான விதியில் இதற்கு இடமில்லை என்று கூறியுள்ளார். எனினும், தன்னுடைய முடிவில் ராணா உறுதியுடன் உள்ளார்.