வீரியத்துடன் தாக்கும் கொரோனா..! 2-ம் அலையால் இளைஞர்களுக்கும் ஆபத்து

 
வீரியத்துடன் தாக்கும் கொரோனா..! 2-ம் அலையால் இளைஞர்களுக்கும் ஆபத்து

கொரோனாவின் 2-வது அலை முதல் அலையை விட 25 சதவிகிதம் கூடுதல் நுரையீரல் பாதிப்பை உருவாக்கி , உயிருக்கே உலை வைப்பதாக தமிழக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மும்முறை உருமாறிய கொரோனா பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

முதல் அலையை விட இரண்டாவது அலையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்து இருப்பதாகவும் இதனால் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி, அதன் தாக்கும் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனாவின் முதல் அலையின் போது வீடுகளில் தனிமைபடுத்தியும், மையங்களில் கண்காணிப்பில் இருத்தியும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் நோயாளிகளை காப்பாற்றி வந்ததை மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த முறை அறிகுறி அற்ற பாதிப்பை உடையவர்களை வீட்டு தனிமையில் வைத்தாலும், பாதிப்பு ஏற்பட்ட நான்காவது நாளில் நோயின் வீரியம் அதிகரிப்பதாகவும், மிக மோசமான நுரையீரல் பாதிப்பு உருவாகுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் போதே நோயாளிகள் பலரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை 15 முதல் 25 சதவிகித அளவுக்கு அதிகமாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு சிலரை மட்டுமே சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியவதாகவும், பலரை காப்பாற்ற முடியாத அளவுக்கு நுரையீரல் பாதிப்பை கொரோனா உருவாக்கி விடுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனாவின் இரண்டாவது அலைவீச்சில், நல்ல உடல் திறன் உள்ள இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் முக கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்ப முடியுமென அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

From around the web