முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்... கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..!

 
Stalin-PinarayiVijayan

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து கேரள அரசு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14-ம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்.

ஆனால் இந்த 2022-ம் ஆண்டில் ஜனவரி 15-ம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் சமூகங்களுக்கிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14-ம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 15-ந் தேதி விடுமுறையை மாற்றி கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள 6 மாவட்டங்களில் நாளை (ஜன. 14) விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.

From around the web