தனியார் பள்ளிகள் முழுக்கல்விக் கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை! சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை !
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச்முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது ஆகஸ்டு 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் கல்விக் கட்டணங்களை வசூலித்து வந்ததை முறைப்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் நிறுவனங்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. நடப்புக் கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுதுமுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத் தொகையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை மீறி முழுக்கட்டணம் வசூலிப்பது நிரூபணம் செய்யப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.