மணல் கொள்ளையரை விரட்டிய விவசாயி!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளிலும் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக ஊராட்சி தலைவர்கள் தாலுகா அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
அந்த ஒன்றியத்தில் சித்துவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடுகப்பட்டி அருகே காட்டாற்று ஓடையில் மணல் அள்ள டிராக்டரில் சிலர் வந்தனர். இதைக்கண்ட விவசாயி சவுகத் அலி என்பவர் அவர்களை தடுத்து வாக்குவாதம் செய்தார்.
மணல் அள்ள வந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அஞ்சாத சவுகத் அலி தனி ஒருவனாக போராடி அவர்களை விரட்டி அடித்துள்ளார். சுற்று வட்டாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளோ சமூக ஆர்வலர்களோ அவரை பாராட்டி உற்சாகப்படுத்த முன்வரவில்லை என்பது வருத்தப்பட வேண்டியதாகும்.
பாசன நீருக்கு போராடும் விவசாய சங்க நிர்வாகிகள் சவுகத் அலி நேரில் பாராட்டி இருக்க வேண்டுமா?. உயிரை துச்சமாக நினைத்து, ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திய சவுகத் அலிக்கு, சுதந்திர தின வீர விருது வழங்கி கௌரவிக்குமா தமிழக அரசு?
–