கல்லூரி மாணவர் கொலை! மாடியிலிருந்து தள்ளி விடப்பட்டார்!!

 
கல்லூரி மாணவர் கொலை! மாடியிலிருந்து தள்ளி விடப்பட்டார்!!

சென்னையில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை ஆகியுள்ளார்.

சென்னை அரும்பாக்கம், திருவேங்கடகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமியின் மகன் 19 வயது ஸ்ரீராம் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் ராஜா என்பவர் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் லீசுக்கு இருந்து வருகிறார். ராஜாவுக்கு சங்கர் என்ற 28 வயது மகன் உள்ளார்.

குப்புசாமி வீட்டின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீடு காலியானது. அந்த வீட்டுக்கு ராஜாவின் மகன் சங்கர் சென்று  பூட்டு போட்டு வைத்திருந்தார். அந்த பூட்டை உடைக்கச் சென்ற ஸ்ரீராமுக்கும் சங்கருக்கும் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

அப்போது  சங்கர் தள்ளிவிட்டதில் 2-வது மாடியிலிருந்து ஸ்ரீராம் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.அரும்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கர் மற்றும் அவரது தாய் பானு  ஆகிய இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லீசுக்கு இருக்கும் ராஜா, வீட்டின் உரிமையாளர் குப்புசாமிக்கு லட்சம் ரூபாய் லீசுக்கான பணத்துடன், கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை குப்புசாமி அந்த கடன் தொகைக்கு வட்டி செலுத்தவில்லை. அசல் தொகையும் தரவில்லை என்பதால் தனக்கு பணம் கொடுக்கும் வரை அந்த வீட்டுக்கு யாரும் வாடகைக்கு வரக்கூடாது என்பதற்காக ராஜாவின் மகன் சங்கர், மாடியில் உள்ள வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டதாகவும், அந்த பூட்டை உடைக்கும் போது ஏற்பட்ட தகராறில் மாடியில் இருந்த தள்ளி விட்டதில் ஸ்ரீராம் கீழே விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. 

A1TamilNews

From around the web