பாஜகவை சேர்ந்த நடிகை மீது கந்துவட்டி புகார்

 
Jayalakshmi

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அதில், மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கும் 9 பேருக்கு வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக ஜெயலட்சுமி கூறினார். அதன்படி குறிப்பிட்ட தொகையையும் பெற்றுக்கொடுத்தார். பின்னர் கடன் தொகையை செலுத்திவிட்டோம்.

ஆனால் கொடுத்தது வட்டி என்றும், அசல் பணத்தை தர வேண்டும் என்றும் ஜெயலட்சுமி உள்ளிட்ட சிலர் மிரட்டுகின்றனர்.  வங்கிக்கடன் எனக்கூறி ஜெயலட்சுமி வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்தது தெரியவந்ததாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி சீரியலில் நடித்துப் பிரபலமானவர் ஜெயலட்சுமி. சீரியல் மட்டுமின்றி, படங்களிலும் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ‘வேட்டைக்காரன்’, ‘குற்றம் 23’, ‘விசாரணை’, ‘அப்பா’, ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.  

இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web