தங்கியிருக்கும் வரை மனைவி.. விஜய் பட பாணியில் கான்டிராக்ட் திருணம் செய்யும் சுற்றுலா பயணிகள்!

இந்தோனேசியவில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், இந்தோனேசிய கிராமங்களில் உள்ள வறுமையான பெண்களுக்கும் இடையே நடைபெறும் சுகபோக திருமணங்கள் என அழைக்கப்படும் குறுகிய கால திருமணங்கள் பெருவாரியான மக்களிடையே கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகியவற்றின் அறிக்கைகள் வழங்கிய தகவல்படி, இந்தோனேசிய கிராமங்களில் உள்ள வறுமையான பெண்கள், முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆண் சுற்றுலா பயணிகளுடன், பணத்துக்கு ஈடாக குறுகிய கால திருமணங்களில் நுழைகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நடைமுறை, மேற்கு இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலா தளமான புஞ்சக்கில் குறிப்பாக அதிகமாக இருப்பதாகவும், அங்கு தான் அரபு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வதாகவும் அதில் கூறப்படுகிறது. கோட்டா புங்காவின் மலை சுகாதார விடுதியில் உள்ள உள்ளூர் ஏஜென்சிகள் இந்த ஏற்பாடுகளை செய்து வருவதோடு, சுற்றுலா பயணிகளை இந்த தற்காலிக திருமணங்களில் பங்கேற்க விரும்பும் பெண்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
இந்த திருமண செயல்முறைகள், குறுகிய திருமண சடங்குகளுடன் மணப்பெண்ணுக்கு மணமகன் குறிப்பிட்ட தொகையை கொடுப்பதுடன் அரங்கேறுகிறது. தொகைக்கு ஈடாக அந்த மணப்பெண் பாலியல் சேவைகள் மற்றும் வீட்டு சேவைகளை சுற்றுப்பயணி அங்கு தங்கியிருக்கும் வரை வழங்க வேண்டும்.
சுற்றுலா பயணி அங்கிருந்து புறப்பட்டு சென்றதை அடுத்து இந்த திருமணங்களும் கலைக்கப்படுகின்றன. இந்த சர்ச்சைக்குரிய நடைமுறை சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் லாபகரமான தொழிலாக உருவாகியுள்ள போதிலும், இது பரவலான விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது. விஜய் - சிம்ரன் நடிப்பில் 2000-ம் ஆண்டு வெளிவந்த ‘பிரயமானவளே’ படத்தில் ஹீரோ ஹீரோயினை கான்டிராக்ட் திருமணம் செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.