காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்!!
![Australia](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/dcde0b74948f4ea565902791bbebce51.jpg)
ஆஸ்திரேலியாவில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லியோங்கதா பகுதியில் கடந்த ஜூலை 29-ம் தேதியன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டில் மதிய உணவாக காளான் சாப்பிட்டிருக்கிறார்கள். உடனடியான அவர்களில் 3 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். நான்காவது நபரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அதே வீட்டில் இருக்கும் மற்றொரு பெண் 4 பேருக்கும் உணவு சமைத்து பரிமாறி இருக்கிறார். ஆனால் அவர் சாப்பிடவில்லை. எனவே அவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பிறகு அவர் மேல் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அந்தப் பெண்ணை அனுப்பி விட்டார்கள் ஆனாலும் அந்தப் பெண் மீதான சந்தேகம் போலீசாருக்கு முழுமையாக நீங்கவில்லை.
வீட்டிற்கு வெளியே இருந்த ஊடகங்களிடம் பேசிய அந்தப் பெண், நான்கு பேரும் தனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக தான் ஒன்றும் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். எந்த மாதிரியான உணவு சமைத்து பரிமாறப்பட்டது எனக் கேட்கப்பட்டபோது, அதற்கு அந்தப் பெண் பதில் கூற மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. எந்த வகையான காளான் சமைத்து பரிமாற்றப்பட்டது என்பது தெரியாவிட்டாலும், அது விஷக் காளான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண காவல் அதிகாரி தாமஸ் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அவர் கூறியு்ளளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களைம் போலீசார் வெளியிட்டுள்ளனர். 70 வயதான கெய்ல் மற்றும் டான் பேட்டர்சன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்துள்ளனர். கெயில் என்பவரின் உறவினரான 66 வயதான ஹீதர் வில்கின்ஸன் வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார். வில்கின்ஸனின் கணவர் 68 வயதான லேன் வில்கின்ஸன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களின் பிள்ளைகளும் சம்பவத்தின் போது வீட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த உணவை உண்ணவில்லை. இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியாததால் உயிரிழந்தவர்கள் உண்ட உணவை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். உயிரைக் குடித்த உணவை சமைத்த பெண் அவர்களுக்கு நெருங்கிய உறவினர் தான் என்றும் போலீசார் கூறியிருக்கிறார்கள். சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.