தாறுமாறாக உயர்ந்த மளிகை பொருட்கள் விலை.. குறைக்காவிட்டால் புதிய வரிகள் போடுவோம்.. பிரதமர் எச்சரிக்கை!

 
Justin Trudeau

கனடாவில் மளிகை பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள் போடுவோம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவில் கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது பொதுவான பணவீக்க விகிதமான 3.3 சதவிகிதத்தை விட அதிகமாகும். இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், மளிகைக் கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

canada

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, “விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்படி, வால்மார்ட், காஸ்ட்கோ உள்ளிட்ட 5 பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களிடம் கேட்க உள்ளேன். அவர்களின் திட்டம் நடுத்தர மக்களுக்கும், அதில் சேர கடினமாக உழைக்கும் மக்களுக்கும் உண்மையான நிவாரணம் வழங்கவில்லை என்றால், நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுப்போம். வரி விதிப்பு உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம்.

இதுதவிர, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் தடுமாறும் நிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை வரி தள்ளுபடி செய்யப்படும்.

Canada

மக்கள் பலர் கஷ்டப்படும் நேரத்தில், சூப்பர் மார்க்கெட்டுகள் லாபம் ஈட்டி சாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பெரிய மளிகை சங்கிலிகள் சாதனை லாபம் ஈட்டுகின்றன. குடும்பங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களின் முதுகில் ஏறி இந்த லாபம் சம்பாதிக்கக்கூடாது.” என்று பேசினார்.

விவசாயிகள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து வசூலிக்கும் கார்பன் வரியை தற்காலிகமாக நீக்குவது, மளிகை கடைக்காரர்களுக்கு ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் செலவை அதிகரிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் இலக்குகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளால், உணவுப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்க முடியும் என கனடாவின் சில்லறை விற்பனை கவுன்சில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web